Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1.60 கோடி மதிப்பில் பருத்தி ஏலம்..

பிப்ரவரி 17, 2023 12:59

நாமக்கல் :– நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில், ரூ. 1.60 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டன.

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள, நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் (என்சிஎம்எஸ்) வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். நாமக்கல், மோகனூர், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, வேலகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த பருத்தியை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

மேலும், திருச்செங்கோடு, கொங்கனாபுரம், பள்ளிபாளையம், ஈரோடு, அவிநாசி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்வது வழக்கம். தற்போது, பருத்தி ஓரளவு வரத்து உள்ளதால் வாரம்தோறும் சந்தையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.

அதன்படி, இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 5,700 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் ஆர்சிஎச் ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ. 7,100 முதல் ரூ. 8,539 வரையிலும், சுரபி ரக பருத்தி ரூ. 8,379 முதல் ரூ. 8,669 வரையிலும், கொட்டு ரக பருத்தி ரூ.4,711 முதல் ரூ.7,000 வரையிலும் ஏலம் போனது. ஏலத்தில் மொத்தம் ரூ. 1.60 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

தலைப்புச்செய்திகள்